|
'Is fake
encounter deaths continuing in Tamil Nadu?'
[Tamil Nadu government should order
for independent enquiry]
மாண்புமிகு தமிழக முதல்வர்,
தமிழ் நாடு அரசு
சென்னை
: : அவசர வேண்டுகோள் : :
தமிழகத்தில் தொடருவது போலி மோதல் கொலைகளா என
விசாரிக்க தமிழக அரசு உடனடியாய் ஓர் சுதந்திரமான
அமைப்பை ஏற்படுத்த வேண்டும் - மனிதம் அமைப்பு தமிழக
அரசுக்கு வேண்டுகோள்
------------------------------------------------------------------
மனிதம் என்னும் எம்மனித உரிமை அமைப்பு விடுக்கும்
அவசர வேண்டுகோளில் தமிழகத்தில் சில வருடங்களாய்
தொடரும் மோதல் கொலைகள் குறித்து ஒரு சுதந்திரமான
விசாரணை அமைப்பை உருவாக்கி அறிக்கை கொடுக்க வேண்டும்
என கோரிக்கையை தமிழக அரசுக்கு வைக்கிறது.
கடந்த சில வருடங்களாய் தமிழகத்தில் என்றும் இல்லாத
அளவுக்கு காவல் துறையினரால் மோதல் கொலைகள்
நடத்தப்பட்டு வருகின்றன. தி.மு.க பதவியேற்று ஒரு
வருடம்கூட ஆகாத நிலையில் ஏறக்குறைய ஏழு மோதல் கொலைகள்
நடந்துவிட்டன. இம்மோதல் கொலைகள் ஆட்சிப் பேதமின்றி
தொடர்கதையாய் இருந்து வருகிறது. இதை காணும் பொழுது,
தமிழகத்தில் நீதித்துறையின் தேவை மீது தொடுக்கப்பட்ட
ஒரு சவாலாகவே பொதுமக்கள் நினைக்க உந்தப்படுகின்றனர்.
அதோடு மட்டுமல்லாது, நடைபெறும் மோதல் கொலைகள்
உண்மைதானா என்ற சந்தேகம் எல்லா தரப்பினரிடமிருந்து
உருவாகியுள்ளது.
அண்மையில்
நடைபெற்ற 'மணல்மேடு" சங்கரின் மோதலும் கொலையும்
போலியானவை தானா எனத் எண்ணத்தோன்றகிறது. ஏனெனில்,
சங்கர் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதியாய்
இருக்கும் சமயம், சங்கரின் தாயார் உச்சநீதி மன்றத்தை
அணுகி, தன் மகன் போலியான மோதல் கொலைக்கு
உட்படுத்தப்படுவார் என விண்ணப்பித்திருந்தார். ஆனால்
உச்சநீதி மன்றம், அதில் எந்தவித முகாந்திரமும்
இல்லையென தள்ளுபடி செய்தது. அதோடு மட்டுமல்லாது, 'மணல்மேடு"
சங்கர் ஓவ்வொரு முறையும் நீதிமன்ற விசாரணையின் போதும்
தன்னை காவல்துறை போலியான மோதல் கொலைக்கு
உட்படுத்துவார்கள் என முறையிட்டிருந்தார். மேலும்,
18-12-2006 அன்று சென்னையில் தலித் தலைவர்களும்,
மனிதம் சார்பாய் அதன் செயல் இயக்குநரும் ஒன்றுகூடி
போலியான மோதல் கொலை நடைபெற வாய்ப்புள்ளதாயும்,
சங்கரின் தாயாருக்கு பிணை வழங்க கோரியும் தீர்மானம்
இயற்றி, காவல் துறைத் தலைவருக்கு நேரடியாய் சென்று
விண்ணப்பித்த பொழுது, முழுப்பாதுகாப்புக்கான பொறுப்பை
தாம் ஏற்பதாய் உறுதியளித்தார். இவ்வளவு
முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டபோதும், 'மணல்மேடு"
சங்கரை கொண்டு வரும் வாகனம் விபத்துக்குள்ளானதாகவும்,
அவர் தப்ப முயன்றபோது சுடப்பட்டு இறந்ததாயும்
காவல்துறை கூறுகிறது.
மோதல் கொலைகளில் இதுவரை தமிழகத்தில் இறந்தவார்கள்
நக்சல் மற்றும் ரௌடிகள் என்றிருந்தாலும், இவர்கள்
அனைவரையும், சட்டத்தின்முன் நிறத்தி முறையான
விசாரணைக்குப்பின் தண்டனை பெற்று தருவதே சரியாய்
இருக்கும். மோதல் கொலைகளை உடனடியாய் நிறுத்த தேவையான
நடவடிக்கைகளை எடுக்க தமிழக அரசு செய்யும் அதே வேளை,
இதுவரை நடைபெற்ற மோதல் கொலைகள் உண்மையானவை தானா என
விசாரிக்க ஓர் சுதந்திரமான அமைப்பை ஏற்படுத்தி
விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென ‘மனிதம்’ அமைப்பு
அவசர வேண்டுகோளை தமிழக அரசுக்கு விடுக்கிறது.
நன்றி
இப்படிக்கு,
மனிதத்திற்காக,
Sd. அக்னி சுப்பிரமணியம், செயல் இயக்குநர், மனிதம்
Ref : 2/UA/2007 Dated : 09-02-2007
|